ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார். இவர் 3 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார்.

கும்பகோணம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது தஞ்சாவூரில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும் அரசு பஸ் ஒன்று அங்கு வந்தது. அதில் அவர் ஏறி பயணம் செய்தார். அந்த பஸ்சில் கண்டக்டராக அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் மேட்டுத்தெருவை சேர்ந்த நீலமேகம் (46) என்பவர் பணியில் இருந்தார். 

பஸ் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது மாணவியின் அருகே நீலமேகம் அமர்ந்தார். இரவு நேரத்தில் நீலமேகம் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பஸ் வேலூர் வந்ததும் இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டக்டர் நீலமேகத்தை கைது செய்தனர்.