பாலாற்றில் இருந்து காவேரிப்பாக்கம் ஏரிக்கு 154 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிசுளில் மிகப்பெரியது காவேரிப்பாக்கம் ஏரியாகும். ஏரியின் மொத்த பரப்பளவு சுமார் 3968 ஏக்கர் ஆகும். மொத்த நீர் கொள்ளவு 41.601 மி.க.லிட்டர். ஏரி நிரம்பிய காலங்களில் 10 மதகுகள் வாயிலாக, தண்ணீர் வெளியேற்றப்பட்டு சுமார் 6278 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகின்றன. இந்த ஏரி நிரம்பி வழியும் காலங்களில், தர்மநீதி, சிறுவளையம், துறையூர் உள்ளிட்ட 41ஏரி கள் பயனடையும். கடந்த ஆண்டு பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, காவேரிப்பாக்கம் ஏரியில் 28 அடி உயரம் வரை தண்ணீர் நிரப்பப்பட்டன.
தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகின்றன. இதனால் பாலாற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் வாயிலாக காவேரிப்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 154 கன அடி, தண்ணீர் வர தொடங்கி உள்ளது. இதன் காரணமாக ஏரியில் தற்போது 24.5 அடி உயரம் வரை தண்ணீர் நிரம்பி இருக்கின்றன. மழைக்காலம் தொடங்கும் முன்பே காவேரிப்பாக்கம் ஏரிக்கு பாலாற்றில் இருந்து கால் வாயில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் பாலாற்றில் இருந்து ஏரிக்கு வரும் கால்வாய் பகுதியை சீரமைப்பு செய்து, ஏரியை நிரப்ப வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.