வேலூர் மாவட்டத்தில் மீண்டும் வெயில் அளவு அதிகரித்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.


கோடை காரணமாக வேலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வெயிலின் தாக்கமும் அதிகரித்து வந்தது. குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 104.5 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகியிருந்தது.

அதேசமயம், கடந்த இரு வாரத்திற்கு மேலாக வெயில் அளவு குறைந்து 100 டிகிரிக்கும் குறைவாக பதிவாகியிருந்ததுடன், மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக பலத்த மழையும் பெய்து வந்தது.

இந்த கோடை மழையால் வெயிலின் உக்கிரம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலையும் நிலவியது.

மீண்டும் அதிகரித்த வெயில் : இந்நிலையில், கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 103.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்த நிலையில் சனிக் கிழமை 98.2 டிகிரியாக குறைந்த ஞாயிற்றுக்கிழமை 106.7 டிகிரியாக அதிகரித்திருந்தது.

இதனால், ஞாயிற்றுக்கிழமை பகலில் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக் கம் இருந்தது.

இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.

தற்போது கத்தரி வெயில் தொடங்கி நடைபெறுவதால் வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.