சோளிங்கர் அடுத்த நீலகண்டராயன் பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சகுந்தலா (வயது 50), அருண்குமார் (26). இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சகுந்தலா வீட்டில் ஒரு பவுன் நகை, வெள்ளி கொலுசு, வெள்ளி சாவி கொத்து, பணம் ரூ.6,000 ஆகியவற்றையும், அருண்குமார் வீட்டில் 2 பவுன் நகை, இரண்டு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி அருகே சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் வாலாஜா அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (45), காட்பாடி அடுத்த கீழ்மோட்டூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (47) என்பதும் சகுந்தலா, அருண்குமார் வீட்டில் திருடியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 3 பவுன் நகை, 4 ஜோடி வெள்ளி கொலுசு, வெள்ளி சாவி கொத்து, ரூ.2,500 பணம் மற்றும இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.