திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் விரைவில் மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.

ஆய்வுக்கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் கூடுதல் அலுவலக கூட்டரங்க வளாகத்தில் கொரோனா இலவச சித்த மருத்துவ ஆலோசனை மையம் தொடக்க விழா, மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார்.

 சி.என்.அண்ணாதுரை எம்.பி.(திருவண்ணாமலை), டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி.(வேலூர்), எம்.எல்.ஏ.க்கள் அ.நல்லதம்பி (திருப்பத்தூர்), க.தேவராஜி (ஜோலார்பேட்டை), அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசியது:-

நிவாரணநிதி

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அரவணைத்துச் செல்வது பாராட்டுக்குரியது. ராணிப்பேட்டை மாவட்டத்தை விட பாதிப்பு திருப்பத்தூரில் குறைவாக உள்ளது. விரைவில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க கோரிக்கை அளிக்கப்படும். 

கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டு பாடுபடுகிறார். நிதி நெருக்கடியிலும் கொரோனா நிவாரண நிதி அளிப்பதுடன் மளிகைப்பொருள்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

சித்த மருத்துவ சிகிச்சை மையம்

நிகழ்ச்சியில், சார்-ஆட்சியர் வந்தனா கர்க், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டி.ஆர்.செந்தில்குமார், வருவாய் கோட்ட அலுவலர் காயத்ரி சுப்பிரமணி, அரசு தலைமை மருத்துவர் எஸ்.திலீபன், மாவட்ட கொரோனா கட்டுபாடு அதிகாரி பி.சுமதி மற்றும் காவல், உள்ளாட்சி, நகராட்சி, சுகாதாரம், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து ொண்டனர்.