மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த விடுமுறை டாஸ்மாக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான பார்கள் ஆகியவற்றுக்கு பொருந்தும்.

டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.