ஆற்காடு தாலுகா திமிரி, டி.புதுார், மோசூர் உள்பட 11 இடங்களில் கடந்த 2023ம் ஆண்டு பைக்குகள் திருடு போனது சம்பந்தமாக திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த திருட்டுகள் குறித்து வேலுார் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சிவசக்தி (26) என்பவரை கைது செய்து விசாரித்ததில் 11 பைக்குகள் திருடப்பட்டது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, அவர் கொடுத்த தகவலின் பேரில், திருட்டு போன பைக்குகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்து அவர் மீது வாலாஜாபேட்டை ஜேஎம் 1வது கோர்ட்டில் 4 வழக்குகள் தனித்தனியாக தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி மகாசக்தி நான்கு வழக்குகளிலும் தலா 18 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார். மேலும் நான்கு வழக்குகளின் தண்டனையும் ஏக காலத்தில் மொத்தமாக 18 மாதம் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு வாகன திருட்டுகள் குறைவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.