ராணிப்பேட்டை மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி அசோக் கர்கேட்டா (22), புறா பிடிப்பதற்காக சுவர் மீது ஏறி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அசோக் கர்கேட்டா தொழிற்சாலையின் மேலே புறாக்கள் இருப்பதைக் கண்டு அடிக்கடி மேலே சென்று புறாக்களை பிடித்து வந்துள்ளார். நேற்று காலையிலும் புறா பிடிப்பதற்காக சுவர் மீது ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் அசோக் கர்கேட்டா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.