ராணிப்பேட்டை அடுத்த கொண்டகுப்பம் சிலோன் காலனி அண்ணா நகரைச் சேர்ந்த ரவிகுமார் (42), மணிகண்டன் (40) ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளேரி-வசூர் சாலை தரைப்பாலத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இருவர் இருவரையும் தாக்கிவிட்டு ரூ.20 ஆயிரம் மற்றும் 2 அறிதிறன் போன்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்த சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், சிப்காட் அருகே சந்தேகத்தின் பேரில் இருவரைப் பிடித்து விசாரணை செய்ததில், அரக்கோணம் வட்டம், நந்தி வேடந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரும், ரவிகுமார், மணிகண்டனை தாக்கி பணம், கைப்பேசிகளை பறித்துச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.