ராணிப்பேட்டை அருகே வி.சி.மோட்டூரில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.


ராணிப்பேட்டை அருகே அம்மூர் மேட்டுக்காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). இவர் ராணிப்பேட்டை அருகே வி.சி.மோட்டூரில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் கார்த்திக் தொழிற்சாலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கார்த்திக் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.