உலக குடும்ப மருத்துவர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் மே 19ஆம் தேதி உலக குடும்ப மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளுக்கு குடும்ப மருத்துவர்கள் வழங்கி வரும் பங்கையும், சேவையையும் முதன்மைப்படுத்த தேசிய கல்லூரிகள் கழகங்களின் உலக அமைப்பு (உலகக் குடும்ப மருத்துவர் அமைப்பு - WONCA) 2010ல் முதன்முதலாக இந்நாளை அறிவித்தது.

குடும்ப மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான மருத்துவராக நீண்ட காலமாக இருப்பதால், அவர்கள் நோய்வாய்ப்படும் போதும் அவர்களால் முடியாத பட்சத்திலும் வீட்டிற்கே வந்து மருத்துவம் பார்ப்பார். எனவே, குடும்ப மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பாராட்டும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


நினைவு நாள் :-


1996ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வரான ஜானகி இராமச்சந்திரன் மறைந்தார். 

1985ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி விடுதலைப் போராட்ட வீரரும், பி.எஸ். என்று மக்களால் அழைக்கப்பட்ட பி.சுந்தரய்யா மறைந்தார்.

1904ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி இந்தியத் தொழில் துறையின் தந்தை என்று அறியப்படும் ஜம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா மறைந்தார்.


பிறந்த நாள் :-

நீலம் சஞ்சீவ ரெட்டி
இந்தியாவின் ஆறாவது குடியரசு தலைவரான நீலம் சஞ்சீவி ரெட்டி அவர்கள், 1913ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் என்ற மாவட்டதிலுள்ள இல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.

1929ல் அனந்தபூருக்கு வந்த மகாத்மா காந்தியின் வருகை இவருடைய வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு அவருடைய கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டார்.

இவர் ஆந்திரப் பிரதேச மாகாண காங்கிரஸ் கமிட்டி செயலாளராக நியமிக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். சென்னை காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர், செயலாளர், இந்திய சட்டமன்ற உறுப்பினர் என பல பதவிகளை வகித்த இவர், 1951ல் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். பிறகு, ராஜ்ய சபா உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 முதல் 1960 வரை சிறப்பாக பணியாற்றினார். பிறகு 1962ல் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னுடைய பணியை தொடர்ந்தார்.

தன்னுடைய திறமையான மற்றும் நேர்மையான பணியாற்றலால் 1977ஆம் ஆண்டு இந்தியாவின் ஆறாவது குடியரசு தலைவராக (1977-1982) தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னுடைய இளம் வயதிலேயே தீவிர சுதந்திரப் பற்றுக்கொண்ட இவர் தன்னுடைய 83வது வயதில் (1996) மறைந்தார்.