அரக்கோணம் பழனிபேட்டை டி. என். நகரில் ரெயில்வே காண்டிராக்டர் ராம்வர்தா மீனா வீட்டிற்குள் நேற்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் அந்த நபர் தப்பிஓடி வீட்டின் அருகே மறைந்து கொண்டான்.

இது குறித்து ராம்வர்தா மீனா அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மறைந்து இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பழனிபேட்டை பகுதியை சேர்ந்த சாரதி (21) என்பதும், கூலி வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.

சாரதி மீது வீடு புகுந்து திருட முயன்றதாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.