ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த தகர குப்பம் கிராமத்தை சேர்ந்த ராபர்ட் மனைவி ஜெபக்குமாரி (வயது 33) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ராபர்ட்டும், ஜெபகுமாரியும் தனியார் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராபர்ட் மற்றும் ஜெபக்குமாரி ஆகியோர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பைக்கில் வந்தனர். பொன்னை சாலையில் உள்ள அணைக்கட்டு சர்ச் அருகே வந்தபோது ஜெபகுமாரி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்தார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெபக்குமாரி நேற்று இரவு மூளைச்சாவு அடைந்தார்.

இதை தொடர்ந்து ஜெபக்குமாரியின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்து தானம் வழங்கியுள்ளனர்.

விபத்து தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.