ராணிப்பேட்டை அடுத்த பொன்னை அருகே உள்ள பரமசாத்து கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி இவரது மனைவி ராதா (வயது 40).

ராதா நேற்று மதியம் தனது மகனுடன் பைக்கில் பரமசாத்து கிராமத்தி லிருந்து ராணிப்பேட்டை நோக்கி சென்றனர். குமணந்தாங்கல் கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ராதாவின் சேலை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட ராதாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை ராணிப்பேட்டையில் தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் ராதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் ராதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராதாவின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராதாவின் குடும்பத்தினர் அரசிடம் நிவாரணம் கோரி உள்ளனர்.