ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் வருடம் ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ தற்போது பூத்துள்ளது. இந்தப் பூவானது இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கக்கூடியவை. இவை நள்ளிரவில் பூத்து அதிகாலைக்குள் உதிர்ந்து போகும். இந்தப் பூவின் வாசம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை நறுமணத்துடன் வைத்திருக்கும் தன்மையுடையவை. இவை ஒரு கள்ளி வகை இனத்தைச் சேர்ந்தவையாகும்.

இந்த பூச்செடியில் 10க்கும் மேற்ப்பட்ட பூக்கள் ஒரே நேரத்தில் பூக்கும். இவை பிரம்மாவிற்கு உகந்த பூவாக கருதப்படுவதால் 'பிரம்ம கமலம் பூ' என அழைக்கப்படுகிறது. இந்த மலரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அதனை நினைத்து என்ன வேண்டினாலும் அது கண்டிப்பாக நடக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இப்படி பல சிறப்புகளைக் கொண்ட, இந்த பூ சிவபெருமானுக்கு பிடித்தமானது எனவும் கூறப்படுகிறது.

இந்த பிரம்ம கமலம் பூ, உத்ரகாண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரங்களில் அதிகமாக காணப்படும். ஆனால், தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் ஓரிரு இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை, ஆற்காடு தெத்து தெருவில் வசித்து வரும் முனிரத்தினம் - கிருஷ்ணவேணி தம்பதியர்கள் வேலூரில் உள்ள தோட்டக்கலைத்துறையிடம் இருந்து நான்கு வருடங்களுக்கு முன்பு இரண்டு பிரம்ம கமலச் செடியை வாங்கிவந்து, அதனை தன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பூத்தொட்டியில் வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு இரண்டு பூச்செடிகளில் இருந்தும் 6-க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்துள்ளன. இதனைக் கண்ட தம்பதியினர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின் கோயில் குருக்களை வர வைத்து பிரம்ம கமலம் பூக்களுக்கு சிறப்புப் பூஜைகளை செய்து பக்தியுடன் வழிபட்டனர்.

அப்பகுதியில் இந்த பிரம்ம கமல மலர் பூத்துள்ள தகவல் வேகமாக பரவியதையடுத்து பொது மக்கள் கூட்டமாக இவர்கள் வீட்டின் முன்பு கூடி, அந்த பூவை ஆச்சரியத்துடன் வணங்கி பார்வையிட்டனர். பின் சிவனடியார்கள் தேவாரம், சிவபுராணம், திருவாசகம், என சிவனின் பாடல்களை பாடியவாறு பூவிற்கு சிறப்பான முறையில் மஹா தீபாராதனை காண்பித்தவாறு வணங்கிச் சென்றனர்.