ராணிப்பேட்டை அடுத்த நீலகண்டராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் தினேஷ்குமார்(22) கார்பெண்டர். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமாகி இவரது மனைவி கர்ப்பமாக உள்ளனர்.

இந்நிலையில் தினேஷ்குமார் நேற்று மாலை வேலை முடிந்து ராணிப்பேட்டையிலிருந்து, நீலகண்ட ராயன்பேட்டை நோக்கி பைக்கில் சென்றார். மேல்வேலம் அருகே சென்ற போது எதிரே நீலகண்டராயன்பே ட்டையை சேர்ந்த அன்புசெல்வம் (32) ஓட்டிவந்த பைக் தினேஷ்குமார் பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அன்புசெல்வம் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று தினேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.