மனைவி ரூ.10 லட்சம் வரதட்சணை தராததால் இரண்டாவது திருமணம் செய்த லோகநாதன் (30) மற்றும் அவரது மாமா குமார் (50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கலவை தாலுகா அல்லாளச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். மருந்து பொருட்கள் விற்பனையாளராக உள்ளார். இவரது மனைவி தமிழரசி (24). இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளாள்.

தமிழரசியிடம் லோகநாதன் சொந்தமாக மருந்தகம் வைக்க ரூ.10 லட்சம் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என கேட்டு கொடுமைபடுத்தியுள்ளார். தமிழரசி பணம் தராததால் ஆத்திரத்தில் லோகநாதன், இரண்டாவதாக பிரியா என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தமிழரசி நேற்று ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகின் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் சீதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து லோகநாதன் மற்றும் குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரதட்சணை கொடுமை மோசமான குற்றமாகும். இது ஒரு பெண்ணின் உரிமைகளை மீறுவதாகும். வரதட்சணை கொடுமையை எதிர்த்து குரல் கொடுங்கள்.