ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் வயல்வெளிக்கு நடுவே அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடையில் பணிபுரியும் விற்பனையாளரான ஐயப்பன் நேற்று(ஜூலை 12) இரவு 10 மணிக்கு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். 

பின்னர், காலையில் மதுபானக் கடையை ஒட்டி உள்ள நிலத்தின் உரிமையாளர் வயலுக்குச் சென்றபோது, மதுபானக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு, இது குறித்து மதுபானக் கடையின் மேற்பார்வையாளர் நரசிம்மன் மற்றும் விற்பனையாளர் ஐயப்பன் இருவருக்கும் தகவல் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் இருவரும் மதுபானக் கடைக்கு வந்து பார்த்தபோது, கடையில் உள்ளே இருந்த சிசிடிவி கேமரா - அதன் மெமரி கார்டு, கல்லாப்பெட்டி மற்றும் விலை உயர்ந்த மதுபாட்டில்கள் திருடு போனது தெரியவந்தது. 

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கடையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மதுபானக் கடையின் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.