ராணிப்பேட்டையில், குடிநீர் பைப்லைன் சீர மைப்பு பணிக்காக போக் குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. எதிரெதிர் திசையில் சென்ற வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை - மும்பை நெடுஞ்சாலையில், ராணிப்பேட்டை நவல்பூர்- காரை கூட்ரோடு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அனைத்து வாகனங்களும் அருகில் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலைகள் வழியாக சென்று வருகின்றன.

இந்நிலையில், நேற்று காலை சிப்காட் நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையில் நகராட்சி சார்பில் பழுதடைந்திருந்த குடிநீர் பைப்லைனை சரிசெய்யும் பணி நடைபெற்றது. இதனால், இருபுறங்களிலும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு, ஒரே சாலையில் எதிரெதிர் திசையில் மாற்றி, மாற்றி விடப்பட்டன. இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காலை நேரம் என்பதால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், அலுவலர்கள், வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் என பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உடனே காரை கூட் ரோடு பகுதியில் போலீ சார் போக்குவரத்தை சரி செய்தனர்.

இருப்பினும் இரு புறங்களிலும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நின்றதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

காலையில் பரபரப்பான நேரத்தில் பைப்லைன் சீரமைக்கும் பணியை செய்வதால் வேலை, பள்ளி மற்றும் கல்லூரிக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை. எனவே, இதுபோன்ற பணியை போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரத்தில், பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் மேற் கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.