ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் அரும்பாக்கம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன்(34). இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் கார் கம்பெனியில் டெக்னிசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா(29). இவர்களுக்கு கிஷோர்(3), தஷ்வந்த்(1) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை இவர்களின் 5வது ஆண்டு திருமணநாள் என்பதால் குழந்தை கிஷோரை அங்குள்ள பள்ளிக்கு அனுப்பிவிட்டு பைக்கில் கணவன், மனைவி குழந்தை தஷ்வந்துடன் ஆற்காடு புதுப்பாடி அருகே உள்ள பச்சையம்மன் கோயிலுக்கு சென்றுள்ளனர்.

அப்போது ஆற்காடு செய்யாறு சாலை கடப்பந்தாங்கல் அருகே வரும்போது, வேலூரிலிருந்து வந்தவாசி நோக்கி சென்ற தனியார் பேருந்து பைக் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி இருவரும் பலியாகினர்.

படுகாயம் அடைந்த குழந்தை தஷ்வந்தை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்தவர்களின் உறவினர்கள், அரும்பாக்கம் கிராம பொதுமக்கள் அதிவேகமாக வந்த தனியார் பேருந்தால் விபத்து ஏற்பட்டது என கூறி சடலத்துடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

தகவல் அறிந்த ஆற்காடு கிராமிய காவல் துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து போராட்டம் விலக்கிகொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து தடைபட்டது. இந்த விபத்து குறித்து ஆற்காடு கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.