ராணிப்பேட்டை மாவட்டம் மேலகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா (வயது 22). இவர் இன்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கணவர் அரவிந்தகுமாருடன் வந்து பாதுகாப்பு வழங்கக்கோரி மனு அளித்தார்.

அதில், நான் பி.ஏ.பட்டதாரி. நானும் பெருமுகையை சேர்ந்த அரவிந்தகுமாரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தோம். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள்.

அதனால் எனது பெற்றோர் எங்களின் காதலை ஏற்று கொள்ளவில்லை. எனவே கடந்த 22-ந் தேதி பிள்ளையார்குப்பத்தில் உள்ள கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.

எனது பெற்றோர் மற்றும் தாய்மாமன் எங்கள் இருவரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு அடியாட்கள் மூலம் எங்களை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர்.

ஊராட்சிமன்ற தலைவராக இருக்கும் தாய்மாமா எங்களை கொலை செய்யும் நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

எனது பெற்றோர், தாய்மாமனால் எனக்கும், கணவர் அரவிந்தகுமார், அவரின் குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதையடுத்து போலீசார் காதல் தம்பதியினரை சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.