ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ மாதத்தின் முதல் வார செவ்வாய்க்கிழமைகளில் அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், காவேரிப்பாக்கம் ஒன்றியங்களை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் எளிதில் வருவதற்கு ஏதுவாக மின்னல் ஊராட்சியை சார்ந்த சாலை கைலாசபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள என் எல்பி திருமண மண்டபத்திலும், 3வது வாரம் செவ்வாய்க்கிழமைகளில் கலவை, திமிரி, ஆற் காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, காவேரிப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்ல ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்வு கூட்டரங்கத்தில் நடைபெறும், என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஜூன் மாதம் முதல் வார செவ்வாய்க்கிழமையான இன்று மின்னல் ஊராட்சியை சார்ந்த சாலை கைலாசபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள என்எல்பி திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடக்கும். இதில், பொது மருத்துவம், காது, மூக்கு தொண்டை, முடக்கவியல், மூளை வளர்ச்சி, எலும்பு சிகிச்சை, கண் பார்வை, மனநலம், குழந்தைகள் நலம் உட்பட அனைத்து துறை மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ சான்றுடன் கூடிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் முகாமும் நடைபெற உள்ளது. 

காது கேட்காத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் கூறுகையில், 'கலெக்டர் உத்தரவின்பேரில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அரக்கோணம் அடுத்த சாலை கைலாசபுரம் என்எல்பி திருமண மண்டபத்தில் இன்று நடக்கிறது. 

இம்முகாமில் காது கேட்காத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஒசூரில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் மாதம் ₹10 ஆயிரம் சம்பளத்துடன் இலவசமாக உணவு மற்றும் தங்குமிடத்துடன் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படடுள்ளது. 5வது முதல் 8வது வரை படித்த 18 வயது பூர்த்தி அடைந்த மாற்றுத்திறனாளிகள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். அனைத்து அரசுத்துறை சார்ந்த நலத்திட்டங்கள் வழங்க தேர்வு செய்யும் முகாமும் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்,