ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுகா, நாரை குளம் மேடு பகுதியை சேர்ந்தவர் தீனா (வயது 21). இவர் வேலூரில் உள்ள தனியார் செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் சோளிங்கர் நோக்கி, கிருஷ்ணகிரி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் ராணிப்பேட்டை காந்தி பகுதியை சேர்ந்த தனியார் தொழிற்சாலை தொழிலாளி சரவணன் (56) என்பவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

ராணிப்பேட்டை பாலாறு பக்கத்தில் உள்ள தனியார் தியேட்டர் அருகே வரும்போது, 2 மோட்டார் சைக்கிள்களும், நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த தீனா காயமடைந்தார். உடனடியாக அவரை வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராணிப்பேட்டை போலீசார், சரவணனின் பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.