ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே திதி கொடுப்பதற்காக குடும்பத்துடன் சென்றவர்கள் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த திருமால், அவரது சகோதரி எழிலரசி மற்றும் அவரது இரண்டு மகள்கள் சொந்த ஊரான வேலூர் மாவட்டத்திற்கு உறவினர் திதிக்காக குடும்பத்துடன் வாடகை காரில் சென்றனர். திதியை முடித்துவிட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தபோது ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரம் பழுதடைந்து நின்று கொண்டிருந்த கண்டெய்னர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்தது. கார் ஓட்டுநர் ஐயப்பன், திருமால் மற்றும் அவரது சகோதரி எழிலரசி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் காயங்களுடன் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த வாலாஜாபேட்டை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.