ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சக்கரமல்லூர் அடுத்த எசையனூர் கிராமம் இலுப்பை சாலையைச் சேர்ந்தவர் ஈஸ்வரப் பன். இவரது மகன்கள் குணசீலன் (38), கோபிநாதன் (30). இருவரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள். இதில், இளைய மகன் கோபிநாதனுக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரியைச் சேர்ந்த குமாரின் மகள் ரம்யாவுக்கும் (24) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. தம்பதிக்கு குழந்தை இல்லை.

மேலும், குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை சந்திப்பதை கோபிநாதன் கடந்த சில மாதங்களாக தவிர்த்து வந்ததாககூறப்படுகிறது. இதனால், ரம்யா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், ரம்யா அவரது தாயார் சரஸ்வதி, சகோதரர் கிஷோர் ஆகியோருடன் கடந்த14-ம் தேதி குணசீலன் வீட்டுக்கு வந்து, உன்னால் தான் எனது கணவர் தன்னை சந்திக்க வருவதில்லை என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கிஷோர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து குணசீலனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

படுகாயமடைந்த அவரை அருகில்இருந்தவர்கள் மீட்டு பூட்டுத்தாக்கில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். கிசிச்சை முடிந்து மருத்துவர்களின் பரிந்துரையின்படி அவரை நேற்று முன்தினம் குடும்பத்தார் வீட்டுக்கு அழைத்து வந்தனர். வீட்டுக்கு வந்த குணசீலனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப் பட்டது. இதனால், மீண்டும் அவரைஅழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து ஆற்காடு கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரம்யா மற்றும் சரஸ்வதி ஆகியோரை ஏற்கெனவே கைது செய்தனர். மேலும், குணசீலன் இறந்ததை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தலைமறைவாக உள்ள கிஷோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.