ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கழுத்து நெறித்தும், தலையணையை வைத்தும் கொன்ற கொடூர கணவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Brutal murder of wife in family dispute; Husband arrested in Ranipet 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தோப்புக்கான பகுதியைச் சேர்ந்த தம்பதியர் சேட்டு (வயது 35) பானுமதி (32) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சேட்டு மற்றும் பானுமதி ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்று பிற்பகல் சேட்டு மற்றும் அவரது மனைவி இருவருக்கும் கடுமையான முறையில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த அவரது கணவர் சேட்டு தனது மனைவியான பானுமதியின் கழுத்தை இறுக்கமாக துணியால் பிடித்து நெரித்ததாகவும், அதில் அவர் முழுமையாக சுயநினைவு இல்லாமல் கீழே விழுந்துள்ளார். இருப்பினும் ஆத்திரம் அடக்கிக் கொள்ளாத சேட்டு மனைவி பானுமதியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ததாக தெரிகிறது.

மேலும் அவர் உயிரிழந்ததை அறிந்து கொண்ட சேட்டு வீட்டிலிருந்து வெளியேறி பின்பு மாலை வழக்கம் பள்ளிகளில் இருந்து இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருவது போல வருகை தந்து தனது மனைவி பானுமதி சுயநினைவின்றி கிடப்பதாக கூறி கதறி, கதறி அழுது மிகப்பெரிய நாடகத்தை நடித்து அரங்கேறியுள்ளார். பின்னர் பானுமதியின் உடலை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே உயிரிழந்து பல மணி நேரம் ஆகியுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் பானுமதியின் முகம் உட்பட பல்வேறு பகுதிகளில் காயங்கள் இருப்பதைக் கண்ட மருத்துவர்கள் ஆற்காடு நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மர்மமான முறையில் இறந்த பானுமதி மரணம் குறித்து அவரது கணவர் சேட்டுவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விசாரணையில் சேட்டு எலக்ட்ரிஷன் வேலையை முடித்து விட்டு பிற்பகல் உணவு உட்கொள்ள வீட்டிற்கு வந்ததாகவும் அப்போது பானுமதியிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்து கழுத்தை நெறித்தும் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்ததாக காவல் துறையினரின் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.