வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள பட்டப்படிப்பு, மேல்நிலைக்கல்வி, பட்டயப்படிப்பு, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பள்ளி இறுதித் தேர்வு தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நடப்புக் காலாண்டிற்கு உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க ஏதுவாக அச்சிட்ட விண்ணப்பப் படிவங்களை ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அல்லது இணைய தளத்தில் விண்ணப்பத்தினை www.tnvelaivaaippu.gov.in or https://tnvelaivaaippu.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் வங்கிசேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் வேலை நாட்களில் நேரில் அலுவலகம் வந்து சமர்ப்பிக்கலாம்.

ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற்று வருவோர் வருவாய்த்துறையின் ஒட்டுமொத்த சான்றுடன் உதவித் தொகைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டு கழித்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில் பணியில் இல்லை என்ற சுய உறுதி மொழி படிவத்தை அளிக்க வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.