திமிரி அருகே மைல் கல் மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு குட்டக்கார தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 31) கூலித் தொழிலாளி. 

இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார்சைக்கிளில் ஆற்காட்டில் இருந்து கண்ணமங்கலம் சென்றுள்ளார். 

காவனூரை அடுத்த கரடிமலை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் மைல்கல் மீது மோதியது. 

இதில் யுவராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.