வாலாஜா அடுத்த வள்ளுவம்பாக்கம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (30). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் பனப்பாக்கத்தில் ஜூஸ் கடை வைத்திருந்தார். 

இவர் நேற்று வீட்டில் இருந்து வாலாஜா நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாலாஜாவில் உள்ள சோளிங்கர் ரோட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் சென்ற போது, இவர் பின்னால் வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சுபாஷ் மீது பஸ்ஸின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. அதில், அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து, தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, விபத்தில் பலியான சுபாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.