வேலூர் பாலமதி மலையில் உள்ள பாறை இடுக்கு பள்ளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
இதனை கண்ட பொதுமக்கள் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

பிணமாக கிடந்த பெண்ணின் முகம் கல்லால் சிதைக்கப்பட்டிருந்தது. அவர் சுடிதார் அணிந்திருந்தார். கழுத்தில் தாலி உள்ளது.

இதன் மூலம் அவர் திருமணம் ஆனவர் என்பது உறுதியாகி உள்ளது.அவர் யார் என்று தெரியவில்லை. அவரை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தார்களா? அல்லது அவரை கொலை செய்து பாறை மேல் இருந்து தூக்கி வீசினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலமதி மலை அடிவாரத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இறந்த பெண்ணின் முகம் கல்லில் அடிபட்டு சிதைந்து வீங்கி உள்ளது. யாராவது தாக்கியதில் முகத்தில் காயம் ஏற்பட்டதா அல்லது பாறையில் விழும்போது காயம் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற முழுவிவரம் தெரிய வரும் என்றனர்.