The minister will inaugurate the book fair at Walajaper Arinagar Anna Arts College tomorrow


வாலாஜா அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் புத்தக கண்காட்சி நாளை (14ம் தேதி) தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி நடத்தி வாசிப்பாளர்கள், பொதுமக்கள், அரசுஅலுவலர்கள், இளைஞர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் அதிகப்படியான புத்தகங்களை வாங்கி பயன்பெறும் வகையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி வாலாஜா அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (14ம் தேதி வெள்ளிக்கிழமை) தொடங்கி 22ம் தேதி(சனிக்கிழமை) வரை நடைபெறவுள்ளது.

இந்த மாபெரும் புத்தகக் கண்காட்சியினை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி காலை 9.30 மணியளவில் தொடங்கி வைக்க உள்ளார். காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும்.

இந்த புத்தகக் கண் காட்சியில் சிறந்த பதிப்பாளர்களின் 50க்கும் மேற்பட்ட சிறப்பு நூல் அரங்கங்கள், மிகச் சிறந்த அரியவகை நூல் தொகுப்புகள், 10 முதல் 1000 வரை அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடியில் வழங்கப்படும்.

நூல்கள் வாங்குவோருக்கு தினமும் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினர்க்கும் ஏற்ற வகையில் கலை, இலக்கியம், வரலாறு, சரித்திரம், நவீன இலக்கியம், தன்னம்பிக்கை, மருத்துவம், சுயமுன்னேற்ற நூல்கள், புகழ்பெற்ற பேச்சாளர்களின் சிறப்புரை, தலைசிறந்த தலைவர்களின் நூல்கள். அரசு (TNPSC) மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டி நூல்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட உள்ளன.

மேலும் இந்த மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் மாலை 5 மணியளவில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள். மகளிர் சிறப்பு நிகழ்ச்சிகள், புகழ் பெற்ற பேச்சாளர்களின் நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், நூல் வெளியீட்டு விழாக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்களின் கருத்தரங்கங்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களின் பேச்சுபோட்டி. கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கதை சொல்லும் போட்டிகள் நடைபெற உள்ளது.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த அனைவரும் குழந்தைகளுடன் புத்தக கண்காட்சிக்கு வந்து பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.