திமிரி அடுத்த ஆனைமல்லூர் கிராமத்தில் லாரியில் பதுக்கி வைத்திருந்த 10 டன் ரேஷன் அரிசி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திமிரி பகுதியில் ரேஷன் அரிசியைப்பதுக்கி வைத்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திமிரி காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி தலைமையில், போலீஸார் வியாழக்கிழமை திமிரியை அடுத்த ஆனைமல்லூர் கிராமத்தில் உள்ள தனியார் நெல் அரைவை ஆலையில் சோதனை செய்தனர்.

அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் 135 மூட்டைகளில் சுமார் 10 டன் ரேஷன் அரிசி பதிக்க வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

லாரியுடன், அரிசியை பறிமுதல் செய்த போலீஸார், உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் உதவியுடன் நுகர் பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, லாரியின் உரிமையாளர் சண்முகம் (40) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.