ஒடிசா மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடல், அவரது சொந்த ஊரான கூத்தம்பாக்கத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (44). இவர், ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் அருகே உள்ள கோபால்பூரில் ராணுவ சுபேதாராக பணியாற்றிவந்தார்.

கடந்த 27ம் தேதி சசிகுமார் திடீரென தனது பக்கத்து அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடிந்ததும் ராணுவ அதிகாரிகள். உடலை சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, சென்னையில் சசிகுமார் உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர், சொந்த ஊரான பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்திற்கு கொண்டு வந்து இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டது. பிறகு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சசிகுமார் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.