வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த வீரிசெட்டிபல்லி ஊராட்சி வி.மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). இவர் குடியாத்தத்தை அடுத்த உப்பரப்பள்ளியில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன் மேனகா வேலை செய்து வந்தார். 

கடந்த 4-ந் தேதி மதியம் வெங்கடேசன் தனது மகன் கோபிநாத்துடன் (21) குடியாத்தத்தில் இருந்து தனது கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ராமாலை பகுதியில் சென்றபோது தண்ணீர் பந்தல் சாலை ஓரம் இருந்த பூ மரம் ஒன்று தந்தை மகன் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது திடீரென விழுந்தது.

இதில் வெங்கடேசன் மற்றும் கோபிநாத் இருவரின் தலை மீது விழுந்து அப்படியே நசுக்கியது. அந்த வழியாக வந்த பொதுமக்கள் மரத்தை அப்புறப்படுத்தி மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 6-ந்தேதி வெங்கடேசன் இறந்தார். இந்த நிலையில் அவரது மகன் கோபிநாத்தும் இரவு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். 

விபத்து தொடர்பாக பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.