ஆன்மிக காரணங்களுக்காக மட்டுமின்றி, இதர பயன்களுக்காகவும் மகிழ மரம் பாதுகாக்கப் படவேண்டும். கோவில் தவிர்த்து வீடுகள், பொது இடங்களில் இந்த மரம் வளர்க்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

இந்த மரத்துக்கு கார்பன் டை-ஆக்சைடை நிலைப்படுத்தும் திறனும், ஒளிச்சேர்க்கை திறன் மிகவும் சிறப்பாக இருப்பதால் பகலில் இதன் நிழலில் அதிக ஆரோக்கியமான சூழலை (அதிக அளவு ஆக்சிஜன்) பெறலாம். கார்பன் மாசுபாட்டை குறைக்கும் முக்கியமான மரங்களில் மகிழ மரமும் ஒன்று.

மகிழம் பூவின் எண்ணெய் தனியாகவோ, சந்தன எண்ணெ யுடன் சேர்த்தோ ஊதுபத்தி, முகப் பூச்சு, கிரீம்கள், வாசனை திரவியங்கள் போன்றவற்றில் நறுமண மூட்டியாக செயல்படுகிறது. இதன் பூச்சாறு பசியை தூண்டும், வீக்கத்தை குறைக்கும்.

இந்த மரத்தின் பட்டை அல்லது பட்டை கொண்ட குச்சியை கொண்டு பல் துலக்கினால் பற்கள் உறுதியாகும் என்றும், ஈறுசம்பந்தமான நோய்கள் குணமாகும் என சித்த மருத்துவ குறிப்பு களில் கூறப்பட்டுள்ளன.

மகிழம் பழம் உண்ண தகுந்தது. விதை எண்ணெய் உணவுக் குழாய் கோளாறுகளையும், மூட்டு வீக்கங்களையும் நீக்குகிறது. விதையின் பொடி கபம், பித்தத்தை போக்குகிறது; விஷ முறிவுக்கும் பயன்படுகிறது. சமீபத்திய சில ஆய்வுகளின் படி மகிழ மரத்தின் பூக்கள், இலைகள், பட்டை மற்றும் விதைகள் நுண்ணுயிர் கொல்லிகளாகவும், குடல் புழு நீக்கிகளாகவும் செயல்படுவது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.