குஜராத்தை சேர்ந்த கஷமா பிந்து என்ற பெண் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்தவர் கஷமா பிந்து. 24 வயதான இவர் ஜூன் 11 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இதுகுறித்து கஷமா பிந்து கூறும்போது, “நான் திருமணம் செய்து கொள்ள நினைக்கவில்லை. ஆனால், என்னை மணமகளாக பார்க்க வேண்டும் என்று விரும்பினேன்.
தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டவர்கள் இந்தியாவில் இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தேன். ஆனால், யாரும் அவ்வாறு இல்லை என்று தெரிந்தது. சிலர் சுய திருமணத்தை பொருத்தமற்றதாக உணரலாம். ஆனால், இதன்மூலம் நான் கூற வருவது பெண்கள் முக்கிய மானவர்கள் என்பதே. எனது முடிவை குடும்பத்திடம் கூறும்போது அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்” என்றார்.
திருமணத்திற்கு பிறகு, கஷமா பிந்து கோவாவிற்கு செல்ல இருக்கிறார். இந்து திருமண முறைபடி அவரது திருமணம் நடைபெறவுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு பிரேசிலியன் மாடலான கிரிஸ் கேலரா தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார். 2020-ஆம் ஆண்டு பட்ரிசியா கிறிஸ்டின் என்ற பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.