The thief who left the stolen new tractor because the diesel ran out

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த அவளூர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு பிரிவு போலீசாக பணியாற்றி வருபவர் சீனிவாசன். இவர் நேற்று பிற்பகல் வழக்கம் போல தனது பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டுவந்தார்.

அவளூர் ஆதிசக்தி கோயில் அருகே புதிய டிராக்டர் சந்தேகத்திற்கிடமாக வெகுநேரமாக அதே இடத்தில் இருந்துள்ளது. இதை கவனித்த போலீஸ் சீனிவாசன் அந்த வண்டியின் நம்பரை வைத்து உரிமையாளர் யார் என்று விசாரித்து உள்ளார்.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபா சத்யன், அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் - உள்ளிட்டோருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம் கன்னிகை பேர் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (59) என்பவருக்கு சொந்தமான டிராக்டர் என்பதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் திருடப் பட்டதும் தெரியவந்தது. மாரிமுத்து இதுகுறித்து போலீபோலீசில் புகார் தெரிவித்திருந்தார்.

டிராக்டரை திருடி வந்தவன் டீசல் தீர்ந்து போனதால் அவளூர் பகுதியில் ரோட்டில் அதனை விட்டுச் சென்றுள்ளான் என விசாரணையில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவளூர் போலீசார் டிராக்டர் உரிமையாளர் மாரிமுத்துவை அழைத்து அவரிடம் டிராக்டரை ஒப்படைத்தனர். சிறப்பு பிரிவு போலீஸ் சீனிவாசனுக்கு எஸ்பி தீபா சத்யன் மற்றும் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் பாராட்டு தெரிவித்தனர்.