ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறை தீர்வு மாதாந்திர கூட்டம் நாளை 24ம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது.
கலெக்டர் அலுவலகத்தில் காலை 10.30 மணி அளவில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்துக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகிக்கிறார்.

இக்கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டு வளர்ச்சி துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத்துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசு கட்டுப்பாடு வாரியம், மின்சார துறை, போக்குவரத்துத் துறை, பால்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்கப்பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் களப் பிரச்னைகளை களைத்திட இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்னைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

மேலும் விவசாயிகள் தங்கள் விவரங்களை காலை 10 மணியளவில் பதிவு செய்திட வேண்டும். மேலும் வரும் ஜுலை மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று தாலுக்கா அளவிலும், இரண்டாம் வெள்ளிக்கிழமை அன்று கோட்ட அளவிலும், மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட அளவிலும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறும் என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் அறிவித்துள்ளார்.