Income tax raid at several places of arcot dmk executive and businessman a.v.sarathi
ராணிப்பேட்டை அருகே திமுக நிர்வாகி ஏ.வி.சாரதி வீட்டில் நடந்து வரும் வருமான வரி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காட்டை சேர்ந்த திமுக நிர்வாகி ஏ.வி.சாரதி வீட்டில் ஐடி ரெய்டு
தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று காலை முதல் பதவியேற்று வருகின்றனர். இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் திமுக உடன்பிறப்புகள் இருக்கின்றனர். இந்நிலையில் திமுக நிர்வாகி வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த திமுக நிர்வாகி ஏ.வி.சாரதி. இவர் பிரபல தொழிலதிபராகவும் திகழ்ந்து வருகிறார். முன்னதாக அதிமுகவில் மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளராக இருந்தார். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் ஏ.வி.சாரதியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, வேலூர், ஆற்காடு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை
குறிப்பாக சென்னை, வேலூர், ஆற்காடு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழிலதிபராக திகழ்ந்து வருவதால் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி வேறு சில பிரச்சினைகளிலும் சிக்கியிருக்கக் கூடும். அதிலிருந்து தன்னை காத்துக் கொள்ளவே ஆளுங்கட்சி பக்கம் சாய்ந்திருக்கலாம் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே செய்த தவறுகளை தற்போது தெரிய வந்திருக்கலாம். ஏனெனில் வருமான வரித்துறை அவ்வளவு எளிதாக யாரையும் குறிவைத்து சோதனையில் இறங்காது என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
இன்று பதவியேற்பு நடைபெறும் சூழலில் திமுக உடன்பிறப்புகள் கலக்கம்
சரியான தகவல், நீண்ட நாட்கள் கண்காணிப்பு என எல்லா விஷயங்களையும் உறுதிபடுத்திக் கொண்டே களத்தில் இறங்குவார்கள். எனவே ஏ.வி.சாரதி விஷயத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று திமுக வட்டாரத்தில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.