வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த காவனூர் ரயில் நிலையம் அருகே 18 வயது உடைய வாலிபர் ஒருவரும் , 16 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரும் நேற்று முன்தினம் இரவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி , சப் - இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் ரெயில்வே போலீசார் நேற்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் இறந்து கிடந்த வாலிபர் மற்றும் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ரயிலில் அடிபட்டு இறந்தவர்கள் குடியாத்தத்தை அடுத்த கே. வி. குப்பம் அருகே உள்ள சென்னாங்குப்பம் பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரின் மகள் திரிஷா ( வயது 16 ) என்பதும் , இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 11 - ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. அதேபோன்று அந்த வாலிபர் கே. வி. குப்பம் அருகே உள்ள கீழ்ஆலத்தூர் , காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த புண்ணிய கோட்டி மகன் எஸ்வந்த் ( 18 ) என்பதும் , இவர் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளனர். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து , இருவரும் ஒரே இடத்தில் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளதால் அவர்கள் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தார்களா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.