காவேரிப்பாக்கம் உப்புமேட்டு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 30), லாரி டிரைவர். இவரது மனைவி கிரி (27). இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாலை கிரி டீ குடிப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்து விட்டு வீட்டுவேலை செய்து கொண்டு இருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்துள்ளது. இதில் வீட்டின் மேற்கூரை மளமளவென தீ பற்றி எரிந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைத்தனர். இதில் வீட்டின் மேற் கூரை முழுவதும் எரிந்து வீட்டில் இருந்த துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் முழுவதும் சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் சுபலபிரியா, காவேரிப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் தேவி, ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிசி, பருப்பு, எண்ணெய், வேட்டி, சேலை, உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.