உள்ளாட்சி தேர்தல்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம், நெமிலி ஆகிய ஒன்றியங்களில் நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தல நடைபெற்றது. நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்டது மேலபுலம் ஊராட்சியில் மேலபுலம் புதூர், மோட்டூர், ராமாபுரம், நங்கமங்கலம், எம்.ஜி.ஆர். நகர், அண்ணா நகர் உள்ளிட்ட கிராமங்கள் இந்த ஊராட்சியில் உள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகளில் 6,000 வாக்காளர்கள் உள்ளனர். மேலபுலம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டது. இங்கு நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆண்கள், பெண்கள் வரிசையாக நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர். வாக்குச்சாவடி மையதில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சாலைமறியல்

இந்த நிலையில் மேலபுலம் அரசு மேல்நிலைபள்ளியில் 6-வது வார்டு மற்றும் 8-வது வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஊராட்சி தலைவர் பதவிக்கு இரண்டு பெண்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர், ஒரு வேட்பாளரின் உறவினர் என கூறப்படுகிறது. அவர் அந்த வேட்பாளருக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் எழுந்தது.

வாக்காளர்கள் வாக்களித்த வாக்கு சீட்டினை சரியாக மடிக்காமல், தலைகீழாக இரண்டு சின்னங்களில் முத்திரை பதியும்படி மடித்துள்ளார் என வேட்பாளர் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இப்படி வாக்குசீட்டினை மடித்தால் அந்த வாக்கு செல்லாத வாக்கு ஆகும் என ஒரு தரப்பினர் வாக்கு அளிப்பதை நிறுத்தினர். மேலும் ஓச்சேரி பனப்பாக்கம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தர்ணா

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் துணைபோலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், அவளூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மற்றொரு தரப்பு வேட்பாளர் மத்தியில் 6,8 வார்டில் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் வர வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தேர்தல் வாக்கு பெட்டிகளை அனுப்பவிடாமல் மேலப்புலம் அரசு மேல்நிலைபள்ளி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இரவு 12 மணி வரை சுமார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.