பிரதமரின் தாய்மை வந்தன திட்டம்..!

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் மத்திய அரசு கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கும் உதவி தொகை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டமானது 01.01.2017 அன்று செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் பெயர் பிரதம மந்திரி மாத்ரு வந்தன திட்டம். பிரதமரின் தாய்மை வந்தனத் திட்டம் (PMMVY) என்பது பெண்களுக்குப் பேறுகாலப் பயன்கள் தரும் திட்டமாகும். 2013 ஆம் ஆண்டின் உணவு உறுதிப்பாடு சட்டத்தின் படி, நம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அவர்களுடைய முதல் குழந்தைக்கு மூன்று தவணை மூலம் ரூ 5000 வழங்கப்படுகிறது. அதேபோல் தமிழக அரசு வழங்கும் ரூ.18,000/- உதவி தொகையுடன், இந்த மத்திய அரசு வழங்கும் ரூ.5,000/- உதவி தொகையையும் பெற்று கொள்ளலாம். சரி இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பயன்கள், யாரெல்லாம் இந்த திட்டத்தில் பதிவு செய்யலாம் போன்ற விவரங்களை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம் வாங்க.


இந்த திட்டத்தின் நோக்கம்:-


இந்தியாவில் வாழும் ஏழை எளிய தாய்மார்களின் முதலாவது குழந்தை பெறுவதற்கு முன்னும், குழந்தை பெற்ற பின்பும் போதிய ஓய்வு எடுப்பதற்கு ஏதுவாக, அவர்கள் வேலைக்குப் போகாமல் இருப்பதால் ஏற்படும் பண இழப்பை ஓரளவுக்கு ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு நிதி உதவி அளிக்கிறது. இதனால் கருவுற்ற பெண்களுக்கும், பாலூட்டும் பெண்களுக்கும் ஓரளவு ஆரோக்கியமான நிலை உருவாகிறது.

யாரெல்லாம் பயன்பெறலாம்:-


இந்த திட்டத்தை பொறுத்தவரை மத்திய அல்லது மாநில அரசு துறைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தவிர, மற்ற அனைத்து கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்கள் இத்திட்டத்தில் பயணடைலாம்.

கருக்கலைவு அல்லது குழந்தை இறந்து பிறந்தால் பயன்பெற முடியுமா?

இந்த திட்டத்தின் கீழ் ஒரே ஒரு முறை நிதி உதவி பெற முடியும்.

அதேபோல் தவணைகளாக வழங்கப்படும் நிதி உதவி, கருக்கலைவு அல்லது குழந்தை இறந்து பிறந்ததன் காரணமாகப் பாதியில் நிறுத்தப்பட்டால் மீதியுள்ள தவணைகளை அடுத்த குழந்தை பிறப்பின் போது பெற்றுக் கொள்ளலாம்.

குழந்தை பிறந்து சிலகாலம் கழித்து இறந்துவிட்டாலும், ஒரே ஒரு முறை பயன் பெறும் இத்திட்டத்தில் ஏதாவது தவணைகள் பாக்கி இருந்தால் மட்டும், அடுத்த குழந்தைப் பிறப்பின் போது, நிபந்தனைகளையும் தகுதியையும் நிறைவேற்றினால், பெற்றுக்கொள்ளலாம்.

பயன்கள்:-


மூன்று தவணைகளில் மொத்தம் ரூ.5000/- வழங்கப்படும்.

அதாவது கருவுற்றப் பெண்கள் அங்கன்வாடி மையம் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில், பதிவு செய்து கொண்டதும், முதல் தவணையாக ரூ.1000/- வழங்கப்படும்.

கருவுற்ற காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளில் குறைந்தது ஒரு பரிசோதனைக்காவது வந்தவர்களுக்கு, ஆறாவது மாத கர்ப்பகாலத்தின் போது, இரண்டாவது தவணையாக ரூ.2000/- தரப்படும்.

குழந்தை பிறந்த பிறகு, அதனைப் பதிவு செய்து, BCG, OPV, DPT, ஹெப்படிடிஸ் B ஆகிய தடுப்பூசிகளின் முதலாவது தவணையைப் போட்ட பிறகு உதவித் தொகையின் மூன்றாவது தவணையான ரூ.2000 வழங்கப்படும்.

மேலும் இந்த திட்டத்தில் பிரதமரின் தாய்மை வந்தன திட்டத்தின் கீழ் பயன்பெறுகிறவர்கள், மருத்துவ மனைகளில் பிள்ளை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் ஜனனி சுரக்ஷா யோஜனா (JSY) வின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையான 1000 ரூபாயையும் பெறலாம்.

பிரதமரின் தாய்மை வந்தன திட்டம் / PMMVY Scheme Details in Tamil..! பதிவு செய்யும் முறை:-


தாய்மை வந்தன திட்டத்தின் கீழ் பயன் பெறத் தகுதியுள்ளவர்கள் கருவுற்றதும், அங்கன்வாடி மையம் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மையங்களில் சென்று பதிய வேண்டும்.

இங்கு கொடுக்கப்படும் விண்ணப்ப படிவம் 1-A-யில் தங்களுடைய அனைத்து விவரங்களையும் நிரப்பி, தேவையான ஆவணங்களுடன், கருவுற்ற பெண் மற்றும் அவருடைய கணவனின் கையொப்பங்களுடன் சம்பந்தப்பட்ட மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கணவனின் ஆதார் எண், பெண்ணின் வங்கி கணக்கு எண், யாராவது ஒருவருடைய கைபேசி எண் ஆகியவை கண்டிப்பாக உள்ளிட்ட வேண்டும்.

பின் நிர்ணயிக்கப்பட்ட படிவங்களை அங்கன்வாடி மையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மையங்களில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

மத்திய அரசின் மகளிர்-குழந்தைகள் நல அமைச்சகத்தின் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

முதலாவது தவணை நிதி உதவி:-


பதிவு செய்வதற்கும், முதலாவது தவணை நிதி உதவியைப் பெறுவதற்கும், தாய்-சேய் பாதுகாப்பு அட்டையின் (MCP card) நகல், பெண் மற்றும் கணவனின் அடையாளச் சான்று, வங்கிக்கணக்கு அல்லது அஞ்சலகக்கணக்கு எண் விவரம் ஆகியவற்றோடு, படிவம் 1-A நிறைவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இரண்டாவது தவணை நிதி உதவி:-


இரண்டாவது தவணை நிதி உதவியைப் பெற, கர்ப்பம் தரித்த ஆறாவது மாதத்தில், தாய்-சேய் பாதுகாப்பு அட்டையில் குழந்தைப் பிறப்பிற்கு முந்தைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட விவரங்களைப் பதிந்து, அதன் நகலுடன், படிவம் 1-B ஐ நிரப்பித் தரவேண்டும்.

மூன்றாவது தவணை நிதி உதவி:-


மூன்றாவது தவணை நிதி உதவியைப்பெற, குழந்தையின் பிறப்பினைப் பதிவு செய்த சான்றின் நகல், குழந்தைக்கு முதலாவது தவணை தடுப்புசி போட்ட விவரங்கள் கொண்ட தாய் – சேய் பாதுகாப்பு அட்டையின் நகல் ஆகியவற்றுடன், படிவம் 1-C ஐ நிரப்பித்தர வேண்டும்.

குறிப்பு:-


தாய்மை வந்தன திட்டத்தின் கீழ் பணப்பயன் பெறத்தகுதி இருந்தும் பதிவு செய்யாமல் விட்டிலிருந்தாலும், நிதிஉதவியைப் பெற வழி உண்டு. அப்படிப் பதிவு செய்யாதவர்கள் கருவுற்ற நாளில் இருந்து ஒன்பது மாதத்திற்குள் விண்ணப்பிக்கலாம். இல்லை என்றால் குழந்தை பிறந்த பின்னர் ஓராண்டுக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்

CLICK HERE>>