நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு காசோலை அட்டையுடன் வந்த காந்தியவாதி இளைஞர் ரமேஷ் தியாகராஜன்.
நாமக்கல்: நாமக்கல்லில் காந்தியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் இளைஞர் ஒருவர் ரூ.2.63 லட்சம் கடன் தொகையை செலுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காசோலை வழங்க முன்வந்தார்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திங்கள் கிழமை அரசு நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இதில் தமிழக அரசுக்கு ரூ. ஐந்து லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன் சுமை எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் அருகே மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்த காந்தியவாதி இளைஞரான ரமேஷ் தியாகராஜன் என்பவர் ரூ.2.63 லட்சம் கடன் தொகைக்குரிய காசோலை அடங்கிய அட்டையை தயார் செய்து நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். கோட்டாட்சியர் மு‌.கோட்டை குமார், அந்த இளைஞர் வழங்கிய காசோலை அட்டையை வாங்க மறுத்துவிட்டார். மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வழங்குமாறு அவர் தெரிவித்து விட்டார். இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் சென்றார் இளைஞர் ரமேஷ் வழங்கிய காசோலை அட்டையை மாவட்ட ஆட்சியரும் ஏற்க மறுத்து விட்டார்.