கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டதால் லாரியை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு இருக்கையில் இருந்தவாறே இறந்து கிடந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே நான்கு வழிச்சாலையில் கன்டெய்னர் லாரி நீண்ட நேரமாக சாாலையோரம் நின்று கொண்டிருந்தது.
சந்தேகம் அடைந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு விசாரணை நடத்துவதற்காக சென்றனர். 

அப்பொழுது டிரைவர் சீட்டில் இருந்த நபர் கீழே சரிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

அவர்கள் அளித்த தகவலின்பேரில் 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. அதில் வந்த மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து உடலை ரத்தினகிரி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். லாரியின் பதிவு எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் இறந்தவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு சாமுண்டி நகர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 34) என்பதும் கன்டெய்னர் லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் நீண்ட நாள் விடுப்பு பிறகு கடந்த 29-ந் தேதி பெங்களூருவில் உள்ள தனியார் கார்மெண்ட் தொழிற்சாலையிலிருந்து துணி பண்டல்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி புறப்பட்டு வந்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டது. உயிர்போகும் தருவாயிலும் சமயோஜிதமாக செயல்பட்ட சந்திரசேகர் கன்டெய்னர் லாரியை சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் நிறுத்தினார். 

அதன்பிறகுதான் அவர் இறந்துள்ளார். இதனால் விபத்துகள் தவிர்க்கப்பட்டன. டிரைவரின் கடமையை பாராட்டிய போலீசார் அது குறித்து பெங்களூருவில் உள்ள அவரது மனைவி அஸ்வினிக்கு தகவல் அளித்தனர்.

அவர் அளித்த புகாரின்பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகர் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.