ராணிப்பேட்டை: சட்டப்பேரவை உறுப்பினர்களையும் அதிகாரிகளை யும் செல்போன் உரையாடலில் ஆபாசமாக பேசியதாக மஞ்சம்பாடி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாடப் புத்தகங்கள் விநியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மஞ்சம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவராஜ் என்பவர் வட்டார கல்வி அலுவலர் ஒருவரிடம் பேசியபோது சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் குறித்து இழிவாகவும் ஆபாசமாகவும் பேசியுள்ளார்.

இந்த செல்போன் உரையாடலின் முழு பதிவையும் அவரே கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய வாட்ஸ்-அப் குழு ஒன்றில் பரப்பியுள்ளார். ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த உரையாடல் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் விசாரணை நடத்தினார். முடிவில், சட்டப்பேரவை உறுப்பினர்களையும் அதிகாரிகளையும் ஆபாசமாக பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் சிவராஜையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உத்தரவிட்டுள்ளார்.