ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாஸ்டன்புஷ்பராஜ் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் (17.07.2021) இரவு 11 மணியளவில் ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு அருகே ராணிப்பேட்டை மாவட்ட பறக்கும் படை தாசில்தார் இளஞ்செழியன் மற்றும் வருவாய்த் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது பூட்டுத்தாக்கு அடுத்த நாராயணபுரம் கிராமத்தில் ஒரு மாட்டுக் கொட்டகையில் சிலர் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தாசில்தார் இளஞ்செழியன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் வெளி மாவட்டத்திற்கு கடத்த வைத்திருந்த 63 ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வாலாஜா சிவில் சப்ளை குடோனில் ஒப்படைத்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை எடைபோட முடியவில்லையாம். இதன் எடை 3 டன் இருக்குமென தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசிக்கு யாரும் உரிமை கோரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.