தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரம் முழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவியது. கொரோனா பாதிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக இருந்தது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட பெரிய மாவட்டங்களில் தொற்று பரவல் உக்கிரமாக இருந்தது. கோவை மாவட்டம் சென்னையை முந்திச் சென்றது. இதனால் தனிக் கவனம் செலுத்தி அம்மாவட்டத்தைக் கண்காணிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதேபோல கடந்த வாரம் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். இரண்டாம் முறையாக இன்று கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்றது ஏன்? - முதல்வர் ஸ்டாலினின் அசத்தல் விளக்கம்!
பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்றது ஏன்? - முதல்வர் ஸ்டாலினின் அசத்தல் விளக்கம்!
காலையில் திருப்பூர் சென்ற ஸ்டாலின் பின்னர் கோவைக்குச் சென்றார். கோவையில் 50 கார் ஆம்புலன்ஸ் சேவையையும் தொடக்கி வைத்தார். இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த கொரோனா வார்டுக்கு பிபிஇ கிட் அணிந்து சென்றார். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். நோயாளிகளிடமும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார். கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் இருக்கும் வார்டில் முதலமைச்சர் ஒருவர் நேரில் சென்று கவச உடை அணிந்து ஆய்வு செய்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இச்சூழலில் பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்றது ஏன் என்பது குறித்து முதல்வர் விளக்கமளித்துள்ளார். “கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!
கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்” என்றார்.