பொங்கல் வைக்க உகந்த நேரம்
நிகழும் மங்களகரமான பிலவ சார்வரி வருஷம் தை1-ம் தேதி 14.01.2021 வியாழக்கிழமை வளர்பிறை பிரதமை திதி, திருவோண நட்சத்திரம் சித்த கூடிய சுப தினத்தில் காலை 08.15 மணிக்கு மகர லக்னத்தில் சூரியன் மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனை முன்னிட்டு தை மாதம் 1ம் தேதி 14.01.2021 வியாழக்கிழமை காலை 09.00 மணிக்கு மேல் 11.00 மணிக்கு சுக்கிர, புத ஒரையில் அல்லது பகல் 01.00 மணிக்கு மேல் 01.30 மணிக்குள் குரு ஒரையில் பொங்கல் வைப்பது உத்தமம்.
புது பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் செடி கொத்து எடுத்து கங்கணமாக தயாரித்து பானையை சுற்றிக் கட்டி அவரவர் சம்பிரதாய முறைப்படி பொங்கல் வைக்கலாம்.

மேற்கண்ட நேரத்தில் குல தெய்வத்தை வணங்கி பொங்கல் வைத்து பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று மூன்று முறை கூவி சூரியனை வணங்குவது நல்லது.

கரும்பு, மஞ்சள் செடி கொத்து, சிவப்பு பூசணி பத்தை, கிழங்கு வகை, மொச்சை, அவரை பழ வகைகள் வைத்து நிவேதனம் செய்து, புஷ்பத்தை எடுத்துத் தூவி வணங்கி பூஜை முடிந்ததும் கோமாதாவான பசுவுக்கு பொங்கலை வாழை இலையில் வைத்து உண்ண வைப்பது, பிறகு நம்முடைய மூதாதையர்களை நினைத்து காகத்துக்கு பொங்கல் வைப்பது உத்தமம்.
மாட்டுப் பொங்கல்
மறுநாள் 15.01.2021 வெள்ளிக்கிழமை அன்று காலை 6.00 மணிக்கு மேல் 8.00 மணிக்குள் சுக்கிர புதன் ஒரையில் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து, மாட்டுக் கொட்டைகளை சுத்தம் செய்து காலை 10.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குரு ஒரையில் கோ பூஜை செய்து நைவேத்தியம் செய்து, பிறகு மாடுகளை நமஸ்காரம் செய்து விட்டு வாழை இலையில் பொங்கல் வைத்து அவற்றிற்கு உண்ண கொடுப்பது நல்லது. 

அவரவர் சம்பிரதாய முறைப்படி மாடுகளை அலங்கரித்து மாலை 5.00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் குரு ஒரையில் மங்கள வாத்தியத்துடன் மாடுகளை தெருவலம் அழைத்து அல்லது ஆலயத்தில் பூஜை செய்து நண்பர்கள் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று பழம் பட்சணம் மற்றும் காணிக்கைகளை தந்து கௌரவிக்க வேண்டும்.

காணும் பொங்கல்
மறுநாள் காணும் பொங்கலாகும். இன்றைய நாள் முழுவதும் உற்றார் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து உறவாடி உற்சாகமாக பொழுதுகளை கழிக்கலாம். பல இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்து விட்டு வரலாம். மற்றவர்களுக்கு பொங்கல் இனாம் கொடுப்பது பரிசுப் பொருட்கள் கொடுப்பது போன்றவற்றால் நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விக்கலாம்.

- முருகு பால முருகன்