கொண்டபாளையத்தில் யோக நரசிம்மர் தெப்ப உற்சவம் தொடங்கியது
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில், பெரிய மலையில் யோக நரசிம்மரும், சின்னமலையில் யோக அனுமனும் அருள்பாலித்து வருகின்றனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த தலத்திற்கு, ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தி பக்தோசித பெருமாள் சன்னிதி, சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது. கார்த்திகை மாதம், ஞாயிற்று கிழமைகளில், பெரிய மலை மற்றும் சின்னமலையில் சிறப்பு தரிசனம் நடைபெறும்.

யோக நிலையில் உள்ள சுவாமி, கார்த்திகையில் கண் திறந்து அருள்புரிவதாக ஐதீகம். தீர்த்த குளமான தக்கான் குளம், கொண்டபாளையம் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த குளத்தில், தை மாதத்தில் தெப்ப உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டின் தெப்ப உற்சவம், இன்று துவங்கி 23ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.

இன்று காலை, யாகசாலை பூஜையுடன் தெப்ப உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து, யோக நரசிம்மர் மற்றும் யோக அனுமன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

நாளை (22ம் தேதி) இரவு, தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். 23ம் தேதி காலை, தெப்ப உற்சவம் நிறைவடைகிறது.

இந்த தெப்ப உற்சவத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.